வியாழன், 11 அக்டோபர், 2012

மழைக்குறிப்புகள்

எண்ணிலடங்கா சந்தோசத்தையும்,
நடைபாதைவாசிகளின் மீதான கவலையையும்
கிளறியபடி
ஒரு சேரப் பெய்துவிட்டுப் போகிறது
மழை!!!!!
 
நனைந்து கொண்டே
குடை பிடிக்கையில்
மழலையாய் மாற்றி விடுகிறது
மழை!!!!!
 
விவசாயிக்கு சொர்க்கமென்றும்
மண் பாண்ட தொழிலாளிக்கு
நரகமென்றும்
இரு முகங்கள் காட்டுகிறாய்
எது தான் உன் நிஜ முகம்
பதில் கூறு
என் மழையே!!!!
 
பல நேரங்களில்
காதலியைப் போல
சூடு கிளப்பியும்,
சில நேரங்களில்
மனைவியைப் போல
நனைத்தும்
முத்தமிட்டுப் போகிறது
மழை.


"குடைய எடுத்துப் போடா" என்ற அம்மாவின் குரல் செவியில் நுழைந்த அளவுக்கு மனசுக்குள் நுழையாமல் போனதால் வழக்கம் போல மறதியும், கொஞ்ச தூரம் போனதும் பெருமழையும் எட்டிப் பார்த்தது. முதன்முறையாக மறதிக்காக சந்தோசப்படுகிறேன்.



"அதிகமா அரிசியைத் திங்காதடா. அப்புறம் கல்யாணம் அன்னைக்கி மழை பெய்யும்" என்று அம்மா சொன்னதற்குப் பிறகு தான் முன்பை விடவும் அரிசி திங்க அதிகமாகப் பிடிக்கிறது எனக்கு.