சனி, 30 ஜூலை, 2011

டேப் ரிக்கார்டர்...


         
       நேற்று ஒரு முக்கியமான பத்திரம் கிடைக்க வீட்டையே தலைகீழாகப் புரட்டி தேட வேண்டியிருந்தது. வீட்டின் எல்லா அறைகளைகளையும் அலசியாயிற்று. ஆனால் கிடைத்த பாடில்லை. எங்கே போனது என்றும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் கடைசி முயற்சியாக வீட்டு பரணின் மேல் இருந்த ஒரு பழைய டிரெங்கு பெட்டியை கீழே இறக்க வேண்டியதாகப் போய்விட்டது. மிகக் கடுமையாக பாரம் இருந்தது. ஒரு வழியாக கீழே இறக்கி விட்டேன். இறக்கியதும் பார்த்தேன் பூட்டிக் கிடந்தது. சாவி எங்கே என்று தெரியவில்லை. பூட்டு உடைப்பட்டது. 

        
     திறந்து பார்க்கையில் எனக்கான சின்னச் சின்ன அதிசயங்கள் காத்துக் கொண்டிருந்தன. சிறு வயதில் நான் விளையாட பயன்படுத்திய பொருட்கள், பழைய சட்டை, ஏதேதோ டைரிகள் என்று அதிசயங்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. அவைகளைப் பார்க்க பார்க்க எதற்காக இந்த டிரெங்கு பெட்டியை திறந்தோம் என்ற ஞாபகமே மறந்து விட்டது. பெட்டியிலிருந்த சாமான்களில் பாதியை வெளியே எடுத்து வைத்து விட்டேன். ஒரு மஞ்சள் பையில் மேலும் பல அதிசயங்கள். எல்லாம் பொக்கிஷம்.


      சின்ன வயதிலிருந்தே நான் ஒரு பாட்டுப் பைத்தியம். ஏதாவது சினிமாப் பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அந்த பெரிய மஞ்சள் பையில் பழைய பாடல்களின் ஆடியோ கேசட்களும், அப்போது வெளியாகியிருந்த படங்களின் பாடல் கேசட்களும், கதை வசன கேசட்களும் நிரம்பி இருந்தன. கூடவே பாட்டு புத்தகங்களும் இருந்தன. செல்வம், சாந்தி நிலையம், எங்க வீட்டுப் பிள்ளை, மறுபடியும், கும்பகரை தங்கையா போன்ற திரைப்படங்களின் ஆடியோ கேசட்கள், லவகுசா, வசந்த மாளிகை, புதிய பறவை, கேப்டன் பிரபாகரன், ஏழை ஜாதி போன்ற திரைப்படங்களின் கதை வசனம் கேசட், எஸ்.வி.சேகரின் வால் பையன், சின்ன மாப்ளே, பெரிய தம்பி போன்ற நகைச்சுவை நாடகங்களின் ஆடியோ கேசட்கள், ராம்ஜி ஆடியோவின் முற்போக்குப்பாடல்கள், கூடவே திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் என அந்த மஞ்சள் பெரிய பையில் அதிசயங்கள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.


        3 வயதிலிருந்தே பாட்டு கேட்பது என்பது எனக்கு கொள்ளைப் பிரியம். எனது பக்கத்து வீட்டு ரவி மாமா தன் நெசவு தறிக்கு பக்கத்தில் ஒரு பெரிய ஆடியோ ப்ளேயரை வைத்திருப்பார். அப்போது வெளியான கரகாட்டக்காரன் பாடத்தின் பாடல்கள் செமஹிட் அடித்துக் கொண்டிருந்த நேரம். கரகாட்டக்காரன் என்று என் வாயில் கூட நுழையாத சமயம் அது. அவரின் வீட்டுக்குப் போய் "கட்டன்" பாட்டுப் போடுங்க என்று அவரை பாடாய் படுத்தி எடுத்திருக்கிறேன். 


       எனக்கு 7 வயது இருக்கும் போது பெரியம்மை நோயால் கடுமையாக பாதிப்பட்ட போது எனது பொழுது போக்கிற்காக என் தந்தை ரவி மாமாவிடம் இருந்து செய்து வாங்கி ஒரு பழைய டேப் ரிக்கார்டர் தான் எனது முதல் சொத்தாக இருந்தது. அந்த டேப் ப்ளேயரை என்னவெல்லாமோ பாடு படுத்தி இருக்கிறேன். அதில் இருக்கும் கேசட்டை பாடக்கூடிய மெக்கானிசத்தை பல முறை கழட்டி மாட்டியிருக்கிறேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அந்த டேப் என்னை சந்தோசப்படுத்தி வந்திருக்கிறது. 


         பெரும்பாலும் எங்கள் பகுதியில் ஆரம்ப காலங்களில் நெசவுத் தொழிலே பிரதான தொழில் என்பதால் எல்லா வீடுகளிலும் கேசட் பிளேயர் அல்லது முடிந்த மட்டும் ரேடியோவாவது இருக்கும். டிஎம்எஸின் முருகன் பாடல்கள், சுப்ரபாதம் எல்லா வீடுகளிலும் காலை நேரங்களில் கேட்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான கல்யாண வீடுகளில் ஒலிப்பது புதிய பறவை, தில்லானா மோகனம்பாள் கதை வசன கேசட்கள் தான். தறி நெய்யும் போதும் அலுப்பும், சலிப்பும் ஏற்படாமல் இருக்க பாட்டு கேட்டுக் கொண்டே தறி நெய்வது தான் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு. பகல் முழுவதும் தறி. மாலை நேரங்களில் சினிமா. அதுவும் அந்த அசோக் தியேட்டரில் 80 காசுகளுக்கு தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு படத்தைப் பற்றி அளவளாவிக் கொண்டே வீடு வரை நடந்து வருவதை யாராலும் மறக்கவே முடியாது. படத்தின் இடைவெளியில் சிறுவர்களும், பெரியவர்களும் "கள்ள, முருக்கு..., கள்ள, முருக்கு" என்று நாம் இருக்கும் இடத்திலேயே வந்து விற்பார்கள். அந்த முருக்கும், கடலையும் இந்த உலகின் எந்த மூலையிலும் கிடைக்காது. இப்படியாகத் தான் இருந்தது எங்கள் பகுதியின் மக்கள் வாழ்வும், பொழுதுபோக்கும். ஏறக்குறைய என்னுடையது அப்படி தான். தொழில்நுட்பம் வளர்ந்த பின் சதா சர்வஉலகின் அடிப்படையும் பணமென்று மாறிப் போன பின் எங்கள் பகுதியில் நெசவாளர்களின் எண்ணிக்கையும், கேசட்களும், டேப் ரிக்கார்டர்களும் காணாமல் போய்விட்டது. அந்த அசோக் தியேட்டரில் கடைசிப் படம் திரையிட்டு ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேல் இருக்கும். தியேட்டரில் புல் முளைத்து சிதிலமடைந்து விட்டது. அங்கே இன்று என்று போஸ்டர் ஒட்டும் பகுதியில் செந்தூரப்பூவே போஸ்டர் இன்னும் கிழிபடாமல் பழைய சோகமான கதைகளை போவோர் வருவோரிடம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது இப்பொழுதும்.....  

என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி


  

வெள்ளி, 29 ஜூலை, 2011

பயணங்கள்


          தினமும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும் சென்று வர நான் பேருந்து பயணத்தையே விரும்புவதுண்டு. அதிலும் பயணம் குறைந்தது 25 நிமிடங்களுக்கு மேலாகும் என்பதால் ஏதாவது புத்தகத்தைத் தூக்கி வாசிக்கவோ அல்லது கூடிய மட்டும் வாசிப்பது போல் நடிக்கவோ ஆரம்பித்து விடுவேன். சன்னலோரத்தில் அமர்ந்தாலும் வேடிக்கை பார்க்கிற பழக்கம் ஆரம்பங்களில் இருந்தாலும், பிற்பாடு ஒரே வழிப் பயணம், பார்த்துப் பார்த்து சலித்த இடங்கள் என்பதால் புத்தகங்களுக்குள் மூழ்க வேண்டியதாகப் போய்விட்டது.


               மேலும் யாராவது தெரிந்தவர் பேருந்தில் ஏறி விட்டாலோ, பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ போதும். எனக்கு வேர்த்து விடும். அவரிடம் பேச வேண்டுமே என்ற நிர்பந்தம் என்னை பாடாய் படுத்தி விடும். நன்றாகத் தெரிந்தவர் என்றால் கூட பரவாயில்லை பேசுவதற்கு ஏதாவது இருக்கும். ரொம்ப அறிமுகமில்லாதவர் வந்தால் என் கதி அதோ கதி தான். பெரும்பாலும் நான் ஒரு தனிமை விரும்பி. ஆனால் என்னைத் தெரிந்தவர் அப்படி இருக்க வேண்டும் என்று என்னால் எதிர்பார்க்க முடியாதல்லவா. அதனாலேயே தெரிந்தவர்கள் ஏறிவிட்டால் அவர்களை கவனிக்காதது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதற்காக நான் கண்டுபிடித்த யுக்தி தான் ஒரு புத்தகத்தை விரித்து வைத்து படிப்பது போல் பவ்லா செய்வது என்பது. 


               ஆனாலும் சிலர் நீ விடாக் கொண்டேன் என்றால் நான் கொடாக் கொண்டேன் என்று நிரூபிப்பதற்காக அழைத்துப் பேச முயற்சிப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைப்பதோடு ஒரு சில குசலம் விசாரிக்கின்றபடியான கேள்விகளைக் கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவேன். இதனாலேயே சில சமயங்கள் பேருந்துப் பயணங்கள் புடிக்காமலே போய்விடும். ஆனாலும் பேருந்தில் செல்லவே மனம் விரும்பும்.


                 பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டால் நான் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு என்னை மாற்றிக் கொள்வேன். சில்லறைச் சண்டைகள், இருக்கைப் பிரச்சனைகள், சினிமாப் பாடல்களின் சத்தம், குலுங்கி குலுங்கி தள்ளாடும் பேருந்து, வேகமாகப் போய் பிரேக் போடும் போது டிரைவரை வசவு மழையால் அர்ச்சிக்கும் கிழவிகளின் சத்தம், முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர் அவரோடு வந்திருந்திருந்த நண்பரை தன் அரசியல், சமூகஅறிவு ஞானத்தால் திணற வைத்துக் கொண்டிருக்கும் சூடான விவாதம், குழந்தையின் அழுகை இது போன்ற எந்த சத்தமும் என்னைப் பாதிக்காத மாதிரி தியானத்தில் மூழ்கிப் போயிருக்கும் வசிஷ்டரைப் போலாகிப் போய்விடுவேன்.  


                    இப்படியாக கடந்த என் நாட்களும், பயணங்களும் ஒரு நண்பரால் திசை மாறிப் போன வரலாறு உண்டு. ஒரு முறை என் கல்லூரி நண்பர் ஒருவருடன் சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தேன். வழக்கம் போல கொஞ்ச நேரம் அவரோடு உரையாடிவிட்டு வேறு எங்கும் வேடிக்கை பார்க்காமல் புத்தகத்தில் மூழ்கிப் போய்விட்டேன். என் நண்பரும் தன் பேச்சை முடிக்காமல் ஏதாவது பேசிக் கொண்டே வந்தார். அவரின் பேச்சு என் காதில் விழுந்தது மாதிரி காட்டிக்கொள்ள ம்ம்ம் மட்டும் சொல்லிக் கொண்டு வந்தேன். பேட்டையை கடந்து வண்டி டவுண் தொண்டர் சன்னதியை தொடுவதற்கு தயாராக இருந்தது. நண்பர் இன்னும் பேச்சை நிறுத்தியதாகத் தெரியவில்லை. ஏதோ என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அவரிடமிருந்து தப்பிக்க செல்போனை எடுத்து எனது நண்பனுக்கு போன் பேச ஆரம்பித்து விட்டேன். அவனும் சரியாக கம்பெனி கொடுப்பது போல நன்றாக பேசினான். ஒரு வழியாக பஸ் டவுண் மேம்பாலத்தில் ஏறி ஜங்சனை நெருங்கிக் கொண்டிருந்தது. இறங்குவதற்கு தயாராக இருந்த சமயத்தில் அந்த நண்பரிடம் "ஏடே ஏதோ அப்பல இருந்து பொலம்பிட்டே வந்தல்லா. அது என்னன்னு இப்ப சொல்லு. எனக்கு அப்ப வேற ஒரு ஒர்க் இருந்ததுனால சரியா கவனிக்க முடியல" என்றேன். அதற்கு அவன் "அடப்பாவி நான் சொன்னது எதுவும் நெசமாவே உன் காதுல வுழலயா? கல்லூர்ல ஒரு செவத்த பொண்ணு ஏறிச்சுயா. அவ ஏறுனதுல இருந்து உன்ன தான் பார்த்துகிட்டே வந்துச்சி. உன் கிட்ட பேச கூட டிரை பண்ணிச்சி கூட்டம் இருந்ததுனால முடியல. அவ பாக்குற பார்த்தா உன் லவ் பண்றவளா இருக்கும்னு நெனைக்கேன். ரொம்ப நேரம் உன்னையே பார்த்துட்டு வந்தா" என்றான். அவன் சொல்லி முடித்ததும் என் கண்கள் தன்னிச்சையாக அவளைத் தேடத் தொடங்கின. பேருந்து ஜங்சன் பஸ்ஸடாண்டை தொட்டு பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர். 

திங்கள், 25 ஜூலை, 2011

ஜன்னல்கள்




இன்று அதிகம் ஜன்னல்கள்
உள்ள வீட்டைக் கட்டுகிறோம்.
பூப்போட்ட ஜன்னல்,
கம்பி வைத்த ஜன்னல்,
சட்டம் வைத்த ஜன்னல்,
கண்ணாடி ஜன்னல் என
ஜன்னல்கள் அலங்கரிக்கிறது
வீடுகளை.
என் கிருஷ்ணன் சித்தப்பா வீட்டில் மட்டும்
12 ஜன்னல்கள் இருப்பதை
எண்ணிப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இன்று ஜன்னல்கள் அதிகம் உள்ள
வீடுகள் பெருகி விட்டன.
ஆனால் அவைகள்
திறக்கப்படக்கூடாது
என்ற நிபந்தனைகளுடன் தான்
வைக்கப்டுகின்றன.

வெள்ளி, 22 ஜூலை, 2011

மறக்க முடியாத தமிழ் சினிமாக்கள் - (பாகம் - 4)


             ஏறக்குறைய எம்.கே.தியாகராசரின் "ஹரிதாஸ்" செய்த  சாதனையை இது வரை எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை எனலாம். 1944ல் வெளியான இந்தத்திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் 768 நாட்கள் ஓடியது (ஓட்டப்பட்டது அல்ல). மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே திரைப்படமும் இதுதான். இந்தப் படத்தில் பாகவதரோடு டி.ஆர்.ராஜகுமாரி சேர்ந்து நடித்திருந்தார். 

            இந்த காலத்தில் வரும் படங்கள் 50 நாட்களைத் தாண்டினாலே வெற்றி விழா என்று அலப்பறை பண்ணுகிறார்கள். அதிலும் அந்தப்படத்தில் நாயகிக்கு எந்த வேலையும் இருந்திருக்காது. அந்த நாயகி வெற்றி விழா கொண்டாட்டத்தில் பண்ணுகிற பந்தா இருக்கிறதே. எப்பா தாங்க முடியாது. என்னமோ இவரால் தான் அந்தப் படமே ஓடியதாகவும், தான் இல்லாமல் இந்த வெற்றி இல்லவே இல்லை என்று அளந்து விடுவார். அடுத்ததாக அவரை அணுகும் இயக்குநர்களிடம் அவர் பேசும் சம்பளமும், வைக்கிற கண்டிசன்களும் இயக்குநரை பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடச் செய்து விடும். இப்படி செய்த எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 
அந்த காலத்தில் நடிகைகள் தனியாக கேரவன் கேட்டார்களா? இது தான் சாப்பிடுவேன் என்று கண்டிசன் போட்டார்களா என்று தெரியவில்லை. அந்த காலத்து நடிகைகளிடம் திறமை இருந்தது, நடிப்பு இருந்தது. ஆனால் இந்த காலத்து நடிகைகளிடம் நடிப்பை விட அதிக "தாராளம்" மட்டும் தான் இருக்கிறது. மொழி, பருத்தி வீரன், பூ போன்று நடிக்க வாய்ப்புள்ள படங்கள் தற்போது குறைவாக வருவதும் ஒரு காரணம். அந்த காலத்தில் பத்மினி, ராஜசுலோச்சனா போன்ற நடிகைகளுக்கு தமிழ் தாய் மொழி இல்லை எனினும் தமிழை கற்றுக் கொண்டு எல்லாப் படங்களிலும் அவர்களே பின்னணியும் பேசி நடித்தும் உள்ளனர். தில்லானா மோகனம்பாள் படத்தில் நடிக்கும் போது பத்மினிக்கு உண்மையில் 39 வயது ஆனால் அந்த படத்தில் வெறும் 18 வயது பெண்ணாக தன் உடலை மெருகேற்றி நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார் பத்மினி. அதில் எல்லாப் பாடல்களையும் அவரைச் சுற்றியே இருக்கும். பெரும்பாலும் பழைய படங்களில் பெரிய நட்சத்திரம் நடிக்கும் படத்தில் ஹீரோவுக்காக பாடல் ஒன்று இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத மரபு. ஆனால் தில்லானா மோகனம்பாள் படத்தில் எந்தப் பாடலும் சிவாஜி பாடுகின்ற மாதிரி வராது. அந்த அளவுக்கு நடிகைகள் அந்த காலத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்து வந்துள்ளனர்.

         சரி நம்ம பாகவதர் கதைக்கு வருவோம்.  1934ல் அவர் நடித்த "பவளக் கொடி" நாடகம் பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்து சக்கை போடு போட்டது. அத்திரைப்படத்தை கே.சுப்பிரமணியம் அவர்கள் இயக்கியிருந்தார். மீனாட்சி சினிடோன் நிறுவனம் தயாரித்திருந்தது. பாகவதரோடு எஸ்டிசுப்புலெட்சுமி அவர்கள் நடித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் எம்.கே.தியாகராசபாகவதர்.

          இந்த நேரத்தில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்கள் 1939ல் இயக்கிய தியாகஞபூமி படத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் அந்தப்படம்
பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம்.  படம் வெளியிடபட்டுவிட்டது.  சில நாட்களில் காங்கிரஸ் பிரசாரப் படம் என்று நினைத்து அரசு தடை செய்ய தீர்மானித்தது.  இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்-இயக்குனர் கே.சுப்ரமணியம் மக்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தடை உத்தரவு வரும் முன் அனுமதி இலவசம் என்று அறிவித்து தொடர்ந்து பல காட்சிகள் நடத்தினார்.  படத்தில் நாயகி, கடைசி காட்சியில் காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் சென்று பாடிக்கொண்டு செல்வது போன்ற காட்சியிருந்தது.  பாரதியார் பாடல்-டி.கே.பட்டம்மாள் பாடல்.  படம் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே பட ஸ்டில்களுடன் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது.

             பின்னாளில் படங்கள் தயாரிக்கக்கூட செய்தார் பாகவதர். 1936ல் வெளிவந்த சத்யசீலன் என்ற படத்தை அவரே தயாரித்தார். திருச்சி தியாகராசா பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வெளியிட்டார். சத்யசீலன் படத்தில் அரசனாகவும், சமூக அவலங்களைப் பாடும் மேடைப் பாடகனாகவும் நடித்திருந்தார் பாகவதர்.

            பாகவதரை வைத்து படம் தயாரிப்பதற்காகவே மதுரையைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் "ராயல் டாக்கீஸ்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். பாகவதரின் வெற்றிப் படமான "சிந்தாமணி" படத்தை 1937ல் தயாரித்தது இந்த நிறுவனம் தான். சிந்தாமணி வெற்றிக்குப் பிறகு ராயல் டாக்கீஸ் "சிந்தாமணி டாக்கீஸ்" என்று பெயர் மாற்றம் ஆனது. 1936ல் வெளியான நவீன சாரங்கதாரா படத்தில் பாகவதர் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல் தான் இசைத்தட்டில் வெளிவந்த முதல் பாடல் என்ற உண்மையைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அதே 1937ல் பாகவதரின் நடிப்பில் வெளிவந்த படம் "அம்பிகாபதி". தமிழ் இலக்கிய உலகின் காதல் ஜோடிகளான அம்பிகாபதி-அமராவதியின் காதல் கதை தான் இந்தப் படம். 
பொதுவாக பாகவதர் நடித்த படங்கள் எல்லாமே புராணக்கதைகள் உள்ள படங்கள் தான். எல்லா படங்களிலும் இறைவனைப் பாடும் பக்தனாக பாகவதர் நடித்திருந்தார். அசோக்குமார் படமும் ஏறக்குறைய இந்த வகையறா தான். ஆனால் அசோக்குமார் பின்னாளில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் அந்தப்படத்தில் பாகவதரை கைது செய்கிற சிப்பாயாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தவர் பின்னாளில் அசைக்கமுடியாத நடிகராகவும், தமிழகத்தின் மறக்க முடியாத முதலமைச்சராகவும் வலம் வந்தவர் ஒருவர் நடித்திருந்தார். அவர் வேறு யாருமில்லை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். 

             பாகவதரின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் நிறைய உண்டு. அந்த காலத்தில் 42 பாடல்கள் நிறைந்த உன்னத காவியம் ஹரிதாஸ் என்று சாதாரணமாக விளம்பரம் செய்வார். ஒரு படத்தில் எப்படி தான் 42 பாடல்கள் வரை வருகிறது என்பது நமக்கு ஆச்சரியமான விசயமாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் வெறும் 5 பாடல்கள் இருந்தாலே அது பெரிய விசயமாகப் படுகிறது. அதுவும் பாடல்கள் வந்தால் போதும் வெளியே போய் "தம்" அடிக்கிறவர்களைத் தான் தற்போது அதிகம் பார்க்கிறோம். அந்த காலத்தில் மக்கள் இசையை ரசித்தார்கள். ஆனால் தற்போது இசையை ரசிக்கிறவர்கள் குறைந்து விட்டார்கள்.

            இப்படியாக பாகவதர் நடித்த எத்தனையோ படங்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. புகழின் உச்சத்தில் இருந்த பாகவதர் வாழ்க்கையில் விதி விளையாடத்துவங்கியது ஒரு பத்திரிக்கையாளனில் வடிவில். அந்த சம்பவத்திற்குப் பிறகு டைனோசர் சைசில் இருந்த பாகவதர் புகழ் மெதுவாக சுருங்கி சுருங்கி எறும்பு சைசில் மாறிப் போனது ஆன்டி கிளைமாக்ஸ். அது என்ன சம்பவம்? எதனால் நடந்தது? என்று இனி வரும் பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்...........)


தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.......

என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி


வெள்ளி, 8 ஜூலை, 2011

கறை படியும் காவல் துறை

      சமீப காலங்களில் வரும் செய்திகளைப் படித்தால் சிரிக்கவா, அழவா, வருத்தப்படவா என்று தெரியவில்லை. செய்திகள் மிக வித்தியாசமாக வருகிறது. "எஸ்.பி அலுவலகத்தில் திருட்டு, சப் இன்ஸ்பெக்டரை போலிஸ் தேடுகிறது" என்பது போன்ற செய்திகள். உலகத்திலேயே மிகச் சிறந்த காவல்துறையின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக பெருமையுடன் சொல்லப்படும் காவல்துறை குற்றங்களின் புகலிடமாக மாறத்துவங்கி இருக்கிறது. காவல்துறையில் இருக்கும் சிலர் செய்யும் குற்றங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையே சங்கடப்படுத்தும், சந்தி சிரிக்க வைக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டதன் வேதனையை எங்கே போய் சொல்வதென்றே தெரியவில்லை.

        சட்டங்களை நிலைநாட்டி, பொதுமக்களை ரவுடிகளிடமிருந்தும், சமூக விரோதிகளிடமிருந்தும் காவல்துறை பாதுகாத்த காலம் போய் காவல்துறையிடமிருந்து காவல்துறையை பாதுகாக்க புதிதாய் ஏதேனும் வழி பிறக்காதோ எனும் நிலை வந்து விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு புதிய காவல்துறை அதிகாரி பதவியேற்றவுடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பார். காவல் துறையின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். பொதுமக்களும் விழிப்போடு இருந்தால் தான் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஏதுவாக இருக்கும் என்று. ஆனால் தற்போது காவல்துறையில் இருப்பவர்களே பொதுமக்களின் பார்வையில் ஆபத்தானவர்களாக, குற்றம் புரிபவர்களாக மாறத்துவங்கி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் குற்றச்செயல் புரிபவர்களின் பட்டியலில் காவல்துறையே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.

         திண்டுக்கல்லில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு போதை ஆசாமி குடிபோதையில் சிறப்பு துணை ஆய்வாளரையும், பிற காவலர்களையும் தாக்கிய சம்பவம் ஒட்டு மொத்த காக்கிகளின் சட்டையில் கரியைப் பூசி விட்டது. திருச்சியில் குடிபோதையில் ஒரு இன்ஸ்பெக்டர் ஊருக்குப் போக வந்த ஒரு பெண்ணை கடத்தி காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றி விட்டார். முதுகளத்தூரில் தன் கணவரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையம் சென்று முறையிடப் போய் அங்க ஒரு காவலரின் கொடுமைகளுக்கு ஆளாகிவிட்டார். ஆம்பூரில் தன் சொந்த பெற்றோரையே ஒரு சப்இன்ஸ்பெக்டர் கொலை செய்த சம்பவம் கொடுரத்தின் உச்சகட்டம். இப்படியாக காவல்துறையின் குற்றப்பட்டியலே சீனப்பெருஞ்சுவரின் நீளத்தைத் தாண்டி விடும் போலிருக்கிறது. இது போன்ற செயல்களால் ஏற்கனவே கயவர்களால் பாதிப்புக்குள்ளாகி பயந்து கிடக்கின்ற பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்.

              "காவல்துறை உங்கள் நண்பன்" என்று மானாவாரியாக சொல்லிக் கொள்ளும் காவல்துறை என்று இந்த களங்கங்களை துடைத்துக் கொள்ளப்போகிறது? கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, மோசடி போன்ற குற்றங்கள் என்றும் இல்லாத அளவு பெருகி நாறிக்கிடக்கும் இந்தச் சூழலில் காவல்துறையில் சிலர் செய்துவரும் இது போன்ற குற்றங்கள் குற்றவாளிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைத் தான் காட்டுகிறது. காவல்துறையினருக்கு நிச்சயமாக "கவுன்சிலிங்" தேவைப்படுகிறது. தப்பு செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டுமானால், தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தைத் தொட வேண்டுமானால் முதலில் இது போன்ற கறை படிந்த காக்கிகளை களையெடுக்கவேண்டும். சம்பளத்திற்கு மட்டும் ஆசைப்படுபவர்களாக, மக்களை நேசிப்பவர்களாக, உண்மையான குற்றவாளிகளுக்கு எமனாக காவல்துறை மாறவேண்டும். இதுதான் மக்களின் கருத்து, ஆசையும் கூட...

      குறைக்கப்பட வேண்டியவை காவல்துறை அதிகாரிகளின் தொப்பைகள் மட்டுமல்ல, குற்றங்களும் தான்....... 

செவ்வாய், 5 ஜூலை, 2011

ஹைக்கூக்கள் - 1

சவரன்கள் இல்லாததால்
வரன்கள் அமையவில்லை 
என் மகள் தங்கத்துக்கு....



வெளிச்சம் கிடைக்க
விளக்கை தேடினேன்
விளக்கு கிடைக்க
அங்கே தேவைப்பட்டது
வெளிச்சம்....





நனவாகிறது
ஏழையின் கனவு
சினிமாவில் மட்டும்.....






எத்தனை முறை கல்லெறிந்தாலும் 
நகரவில்லை
குளத்தில் நிலா....






அணையப்போகிறது மெழுகுவர்த்தி
பயத்தில் சிறுவன்
நாளைக்குப் பரீட்சை




மழைக்காக ஒதுங்கியும் 
நனைந்து விட்டோம்
ஓட்டைப்பள்ளிக்கூடம்....





காலிக்குடங்களுடன் சாலை மறியல்
நீரை பீய்ச்சி அடித்து துரத்தியது
அரசு......


நவீனத்திற்கு மாறியது 
மூடத்தனம்
கம்ப்யூட்டர் ஜோசியம்.....




வெள்ளையனானார் காந்தி
காகம் போட்ட 
எச்சத்தில்.....




பசியால் இறந்தவனுக்கு
பத்து நாள் விருந்து




பாலுக்கு வழியன்றி
அழுதது குழந்தை
பக்கத்து கோவிலில் பாலாபிஷேகம்.....




கள்ள நோட்டிலும்
கபடமற்ற சிரிப்பு
காந்தி தாத்தா....




நாளை பள்ளி விடுமுறை
வருத்தப்படுகிறாள்
சத்துணவுச் சிறுமி......




மழை நின்ற பிறகும்
தூறல் 
மரக்கிளை....





தெரியாமல் பறிபோனது கிடைக்க
தெரிந்தும் பறிகொடுத்தேன்
லஞ்சம்...




வாஸ்து பார்த்து கட்டியும்
பறிபோனது வீடு
கடன்....




உறவினர்கள் வருகை
அடகுக்காய் காத்திருக்கிறது
அண்டா.....




கரையேறிய அலைகள்
காவு கேட்டது உயிர்களை
சுனாமி....




"யார் என்னைத் தத்தெடுப்பார்கள்"
ஏக்கத்தில் என் கவிக்குழந்தைகள்
மரணப்படுக்கையில் நான்....




சோதனைக்குழாய் குழந்தை
பிறப்பதை விசித்திரமாய் பார்த்தது
அநாதை இல்லக் குழந்தை....




யாரிடம் கடன் வாங்க?
என் மனதில் 
கற்பனைப் பஞ்சம்....




மழை வர 
நடந்தது கழுதைக் கல்யாணம்
வந்தது கழுதைக் குட்டி....




வேட்டையாடப்பட்டது பறவைகள்
அநாதையானது
மரம்.......






விழித்திருந்து வாங்கிவிட்டோம்
வாங்கியதும் உறங்கிவிட்டோம்
சுதந்திரம்.....





மாதந்தோறும் பிரசவிக்கிறது
என் கடன் வட்டி....





மாணவன் அழுவதற்கு முன்பே
மரம் அழுதது
பிரம்புக்குச்சி.....





குளம் வெட்ட வந்த நிதி
பாதியை வெட்டிக் கொண்டார்
 மந்திரி.....





என்னைக் கடலில் கரையுங்கள்
அலறியது பிள்ளையார் சிலை
அங்கே மதக் கலவரம்.....





வீட்டில் வலையிருந்தும்
மீன் பிடிக்க முடியாது
சிலந்தி வலை....

சில நிஜங்கள்





        போகப் போக இந்த லோகநாயகி சுபாவமே சரியில்லாம போயிடுத்து மாமி. ஆரம்பத்துல நல்ல பொம்மனாட்டியா, ஆத்துக்கு அடக்கமான மருமகளா இருந்தா, ஆனா இப்ப ரொம்ப மோசமானவளா மாறிட்டா. நேக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து மாமி. குடும்பத்துக்கு குத்து விளக்கா இருக்க வேண்டியவ இப்படியா பொறுப்பில்லாதவளா மாறணும்? மாமியார கொஞ்சம் கூட மதிக்கிறதில்ல. எல்லாத்துக்கும் எதிர் பேச்சு தான். அவா ஆத்துக்காரன் அதான் அந்த வினோத்துப்பய இவள லவ் மேரஜ் பண்றதுக்கு முன்னாடியும் இவள சுத்தி சுத்தி தான் வந்தான். இப்பவும் சுத்தி தான் வாரான். இதுல அவனுக்கு வெளியூர்ல வேல கிடச்சி போயிட்டான். வாரத்துக்கு ஒரு நாளோ ரெண்டு நாளோ தான் அவனால வீட்டுக்கு வர முடியும் . இனிமே இந்த லோக நாயகி பண்ணப்போற கூத்தெல்லாம் எங்க அவனுக்கு தெரியப்போறது?

            அவ அம்மாக்கும், அவ மாமியாக்கும் ஒரே வயசு தானே இருக்கும். அம்மாவுக்கு குடுக்குற மரியாதைல கொஞ்சம் கூடவா மாமியாருக்கு இவ கெடுக்கப்பிடாது? தன் மாமியாருக்கு விஷம் கலந்து குடுக்குற அளவுக்கு துணிஞ்சிட்டாளே பாதகத்தி. எல்லாம் அந்த சிவா, அதான் அவ கள்ள புருஷன், வினோத் சினேகிதன் சொல்லிக்குடுக்குற ஐடியா தான். வினோத்துக்கு உள்ளுர்ல கெடைக்க வேண்டிய வேலைய வெளியூருக்கு மாத்தி விட்டதே இந்த சிவா தான். இந்த சிவா வினோத் ஆத்துல காலடி எடுத்து வச்சத்துக்கு அப்புறம் இந்த பிரச்சனை எல்லாமே. இப்ப பாருங்க தன் சினேகிதன் வீட்டுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டான் சண்டாளன்.

             சிவா மோசமானவன்னு தெரிஞ்சிக்காம அவன வீடு வரைக்கும் வர விட்டது வினோத் தப்பு. சிவா போட்ட சொக்கு பொடியில மயங்கி அவன் வலையில விழுந்தது லோகநாயகி தப்பு. இந்த லோகத்துல மனுசாள நம்பவே முடியிறதில்ல மாமி. யாரு நல்லவா? யாரு கெட்டவா? ன்னே தெரிய மாட்டேங்கிறது. எல்லாரும் பாக்குறதுக்கு நல்லவா மாதிரிதான் தெரியுறா. ஆனா பழகிப்பாத்தா தானே தெரியுறது அவா, அவா யோக்கியதை என்னான்னு.

       என்ன பொம்மனாட்டி இவா? இந்த சிவா ஆத்துக்கு வந்தாலே போதும் எல்லாத்தையும் மறந்து அவன் கூட பேச ஆரம்பிச்சிடுறா. அப்படி என்னத்த தான் பேசிப்பாளோ. நேக்கு ஒரு மண்ணும் புரியல. ஒரு தடவ இப்படித்தான் லோகநாயகி சிவா கூட பேசிட்டு இருந்தா. அப்போ அவ குழந்தைய தேள் கடித்திடுத்து. தொட்டில்ல கெடந்து அந்த பச்ச மண்ணு துடியா துடிச்சி அழுகுது. இது கூடவா அவ காதுல விழாம போகும்? அந்த அளவுக்கு பேசுறா. நல்ல வேள அந்த நேரத்துல பெருமாளா பார்த்து கோவிலுக்குப் போன மாமியார சீக்கிரம் அனுப்பி வைச்சிருக்காரு போல. அவங்க மட்டும் அப்போ வரலன்னா..... நெனச்சி பாக்கவே நெஞ்சு பதறுது மாமி.

     இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறம் தானே இன்னக்கி அவா மாமியா லோகநாயகிய கண்டிச்சாங்க. எங்க இவங்க இன்னும் இப்படியே கண்டிக்க ஆரம்பிச்சிட்டா நிம்மதி போயிடும். சிவா கூட பேச முடியாது. கள்ள காதல் வெளிய தெரிய வந்துருமோனு பயந்து அவங்க கொல்ல துணிஞ்சிட்டா. அதனால தான் அந்த விஷம் கலந்த பால அவங்களுக்கு குடிக்க கொடுத்தா. அவங்க அத குடிக்கிறதுக்குள்ள இந்த பாவிபய டிவிக்காரன் தொடரும்னு போட்டு முடிச்சிட்டான். இப்பல்லாம் டிவி சீரியலே பார்க்க முடியல மாமி. ரொம்ப விளம்பரமா போட்டு கொல்றா.

     "ஏண்டி புவனா. குழந்த எவ்ளோ நேரமா பசியில அழுதுண்டு இருக்கு. நோக்கு இந்த டிவி சீரியல பத்தி பேச ஆரம்பிச்சிட்டா எதுவுமே காதுல விழாதோ டீ? நானும் எவ்வளவு பிராணண குடுத்து கத்தீண்டு இருக்கேன். கொஞ்சம் உள்ள வா டீ..."

       அட! அட! அட! சித்த நேரமாவது என்ன நிம்மதியா இருக்க விடுதா இந்த கெழம். எனக்குன்னு மாமியாரா வந்து எம் பிராணத்த வாங்கீண்டு..... என் ஆத்துக்காரர்ட்ட இத ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நாம நம்மதியா இருக்கலாம்ன்னு பல தடவ சொல்லி பார்த்தாச்சி. அவரு கேக்குற மாதிரியே தெரியல. இன்னக்கி வரட்டும் அவரு.... ஹ்ம்.... நீங்க நாளக்கி மறக்காம நிஜங்கள் சீரியல் பாருங்கோ மாமி. நான் அப்புறம் வாரேன்.

     ஒரு வழியாக புவனா வீட்டுக்குள் நுழைகிறாள். அவள் குழந்தை இன்னும் அழுகையை நிறுத்தியதாக தெரியவில்லை.


எழுத்து
வெ.அருண் பாரதி.

கவிதை - காதல்


அழகான வார்த்தைகளுக்குள்
ஒளிந்து கொள்ளும் 
கவிதையைப் போல
உன் மீதான என் காதல்
உனக்குள் தான் ஒளிந்திருக்கிறது
நீ உணர்ந்தால் ஒளிரும்
உணராமல் போனால் ஒழியும்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

பதிவு


இனி 
எல்லாவற்றையும்
பதிவு செய்து கொள்வோம்
இன்றைய நிகழ்வுகள்
ஒன்று விடாமல்...

இன்று போல்
நாளை இருப்பதில்லை

கிளை விரித்து
நேசம் கொடுக்கும்
பசும் மரங்களை....

செவி நுழைந்து
இதயம் சேரும் 
குயிலின் கீதங்களை....

குளம் தேடி 
நீச்சலடித்து
குதூகலித்திடும்
வெண் நாரைகளை.....

மனம் பறித்து 
காற்று வெளிதனில்
கடந்து செல்லும்
மலரின் வாசத்தை.....

பெயரிடா ராகங்களில்
இசையாய் பேசிடும்
கொலுசின் சிணுங்கல்களை....

என
ஒன்று விடாமல் 
எல்லாவற்றையும்
பதிவு செய்து கொள்வோம்

இன்று போல்
நாளை இருப்பதில்லை
நம்மையும் சேர்த்து....