வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 1




அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள். ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு முன்னால் ஜெனரேட்டர்களை மேனுவலாக சுத்த விட்டு ஆன் செய்வார்கள். அந்த காலத்தில் நாடகக் கம்பெனி வைத்திருந்த ஜெகநாதன் ஜெனரேட்டர் ஆன் பண்ணுவதை மிகவும் பக்திமயமாக செய்வார். ஜெனரேட்டர் ஆன் செய்யும் போது அதற்கு தீப ஆராதனை காட்டும் வழக்கம் அவருக்கு இருந்தது. இதை ரொம்ப நாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் புதிதாக சேர்ந்த அந்த இளைஞன். 

ஒருமுறை ஜெனரேட்டர் ஆன் ஆக வில்லை. கம்பெனி முதலாளி ஜெகநாதன் அந்த இளைஞனை அழைத்து சரி செய்யச் சொன்னார். ஏனெனில் அந்த இளைஞனுக்கு எலக்ட்ரிக்கல் வேலைகளும் கொஞ்சம் தெரியும். அவன் வந்து அந்த ஜெனரேட்டரில் தன் தலையை விட்டுப் பார்க்கிறான். பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. ஒரு வயர் அறுந்து கிடக்கிறது. அதை இணைத்தால் ஜெனரேட்டர் ரெடியாகிவிடும். ஆனால் அந்த வேலையை அவன் நேரடியாகச் செய்யாமல் ஏதோ தேர்ந்த வேலைக்காரன் போல் பாவ்லா செய்து பத்து நிமிடங்கள் கழித்து அந்த வயரை இணைத்து சரி செய்கிறான்.

வேலை முடிந்ததும் முதலாளியிடம் செருப்பைக் கேட்கிறான். பதறிப் போன முதலாளி ஏன் செருப்பைக் கேட்கிறாய் என்று கேட்கிறார். "சும்மா குடுங்க முதலாளி" என்கிறான். செருப்பு கையில் கிடைத்ததும் அந்த ஜெனரேட்டரை செருப்பால் அடி அடி என்று அடித்து ஸ்டார்ட் பண்ணச் சொல்கிறார். ஜெனரேட்டர் ஸ்டார்ட் ஆகிறது. முதலாளியிடம் "என்ன முதலாளி ஜெனரேட்டர் இது. தீபராதனை காட்டுனாலும் ஸ்டார்ட் ஆகுது. செருப்பால அடிச்சாலும் ஸ்டார்ட் ஆகுது" என்று சர்வ சாதாரணமாக ஒரே நிமிடத்தில் கண்மூடி வழக்கத்தை மண்மூடிப் புதைக்கிறான்.

அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல.  ராதாகிருஷ்ணனாக நாடகத்துறையில் இளம் வயதில் நுழைந்து பின்னாட்களில் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் பல்வேறு கலகப் புரட்சிகளை ஏற்படுத்திய எம்.ஆர்.ராதா தான். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக