வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கலகங்களை காதலித்தவன் - 6






                  ராதா வானத்திலிருந்து குதித்தவன் அல்ல அற்புதங்கள் புரிவதற்கு. பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியவனும் அல்ல. நம்மைப் போன்ற சாதாரண மனிதப்பிறவி தான் அவன். சொல்லப்போனால் சிறு வயதிலிருந்து பல்வேறு அடக்குமுறைகளையும், பிரிவினைகளையும் சந்தித்து கூடிய மட்டும் அனுபவித்து தான் வளர்ந்தான். நமக்கும் அவன் சந்தித்த அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் அவைகளை எதிர்த்துப் போராடினான். நாம் போராடுவதில்லை. அவ்வளவு தான்.

                
            போராளிகளுக்கு போராடுவதற்கான காரணங்கள் கிடைத்துக் 
           கொண்டே இருக்கின்றன. கோழைகளுக்கும் போராட்டத்தைத் 
           தவிர்ப்பதற்கான காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன 

என்ற கியூபாவின் புரட்சி நாயகன் சேகுவாராவின் வரிகளைப் போல ராதாவிற்கும் இந்த சமூகத்தில் நடக்கும் பிராமணியம், மூடத்தனம், இனபேதம் போன்ற போராடுவதற்கான காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. சொல்லப்போனால் அவன் அவைகளை அனுபவித்தும் பெற்றுக் கொண்டான். 


        பாகப்பிரிவினை திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது சுனில்தத் 'சிவாஜியின் பாத்திரத்தில் திலீப்குமார் நடிக்கிறார். அவரால் சிவாஜியை விடவும் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் ராதாவின் பாத்திரத்தில்தான் ராதாவை விட வேறுயாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது" என்றார். தெலுங்கில் அப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டபோதும் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர். ஆனால் பாகப்பிரிவினை படத்தை இந்திய அளவில் மூன்றாவது சிறந்த படமாக தேர்ந்தெடுத்த இந்திய அரசு விருது வழங்கும் விழாவிற்கு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது. ராதா மட்டும் அழைக்கப்படவில்லை.


        நாடகத்தின் காதலரான ராதா சிறுவயதில் நாடகக்கம்பெனியில் பார்ப்பன ஆதிக்கத்தையும் வைதீக மூடத்தனங்களையும் சந்தித்திருக்கிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எதிர்த்துக் கலகமும் செய்திருக்கிறார். நாடகக்கம்பெனிகளில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவும் காபியும் தயாரிக்கப்பட்டபோது முடிந்தபோதெல்லாம் அதை எச்சில் படுத்தியிருக்கிறார்.


      ஒருமுறை 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் ராதா சிறப்பாக நடித்திருந்தும் நாடகத்திற்குத் தலைமைதாங்கிய சத்தியமூர்த்தி(அய்யர்) அவரைப் புறக்கணித்துவிட்டு அதே நாடகத்தில் நடித்த டி.ஆர்.மகாலிங்கத்தை மட்டும் புகழ்ந்திருக்கிறார். அப்போதே இந்தப் பார்ப்பனப் புறக்கணிப்பு கண்டு மனம் வெதும்பியிருக்கிறார் ராதா.


    அதே சமயம் அவரது நாடகங்களை தடை செய்வதற்காகவே சட்டம் இயற்றியது காங்கிரஸ் அரசு. ராதாவின் குருநாதரான பெரியாருக்காக அரசயலைமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டி வந்தது. தேசியச் சின்னங்கள் அவமதிப்புச் சட்டம் கொண்டு வந்தது. ராதாவுக்காக நாடகத் தடைச்சட்டம் இயற்றியது. 1954ல் ராதாவின் திரைக்கதை அரசின் அனுமதி பெற்ற பிறகே அதாவது சென்சாருக்குப் பிறகே அனுமதிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வந்தது.


    இப்படி மக்களை மறந்து விட்டு சின்னங்களுக்கும் உயிரில்லாத மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது காங்கிரஸ் அரசு. மக்களே உயர்ந்தவர்கள், அவர்களே முக்கியம் என்று சிறையையும் அடக்குமுறைகளையும் சந்தித்து வாழ்வன் தான் ராதா எனும் கலைஞன். 


    இன்று ஈழத்தில் நம்முடைய தமிழ் இனங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட காரணமாக இருந்த சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் நம்முடைய மத்திய காங்கிரஸ் அரசாங்கம். அதனால் தான் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இலங்கை எம்.பிக்களை அழைத்து கவுரவிக்க திட்டம் போட்டப்பட்டது. பின் இடதுசாரி எம்.பிக்கள் உட்பட பலரின் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகும் மத்தியஅரசின் சபாநாயகர் மீராகுமார் இலங்கை எம்.பிக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் தன்மானத்தை காற்றில் பறக்க வைத்து விட்டார்கள். இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று நடவடிக்கை எடுக்கவும் செய்கிறது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் உறவுகளுக்காக குரல் கொடுப்பது இறையாண்மைக்கு எதிரான விசயமா? இல்லை தமிழர்கள் இந்தியர்களே இல்லையா என்பதை தமிழ்மாநில காங்கிரஸ் விளக்க வேண்டும். 


         சரி நம் ராதா கதைக்கு வருவோம். இப்படியாக பல்வேறு அநியாயங்களை சந்தித்து வளர்ந்ததால் தான் ராதாவால் கலகங்களை ஏற்படுத்திய நாடகங்களை உருவாக்க முடிந்தது. நாடகத்தைப் பார்க்க வரும் ரசிகர்களைக் கூட விட்டு வைக்க மாட்டான் ராதா. தனக்குத் தவறென்று தோன்றிவிட்டால் அது யாராக இருந்தாலும் விளாசித்தள்ளும் குணம் ராதாவினுடையது.


      ஒருமுறை நாகப்பட்டினத்தில் நாடகம். 7 மணிக்கு நாடகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மணிக்கே கூட்டம் குமிந்து விட்டது. அலைகடலென மக்கள் வெள்ளம் ராதாவின் நாடகத்தைப் பார்க்க. நமக்கு கூட்டம் சேர்ந்துவிட்டால் தான் என்ன செய்கிறோம் என்று நமக்கேத் தெரியாதே. இது தமிழனைப் பீடித்திருக்கின்ற நோயல்லவா. கூட்டம் கத்தத் துவங்குகிறது. "ஓய் ராதா நாடகத்தப் போடுடா" என்று பலர் கத்தத்துவங்கினர். ராதா மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். உதவியாளர் மூலம் என்ன நடக்கிறதென்று விசாரிக்கிறான். "என்னயா இது நாடகம் 7 மணிக்கு தானே போடுவாம் ன்னு விளம்பரம் பண்ணிருக்கோம்". "ஆமாண்ணே. இவங்க இப்படித்தான்னே கூட்டமா கூடிட்டாங்கன்னா இப்படித்தாண்ணே பேசுவாங்க. விடுங்கண்ணே".


        ராதா மிகுந்த கோபத்தோடு நேராக பாதி மேக்கப்புடன் மேடைக்குப் போகிறான். கூடவே கையில் ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போகிறான். விபரீதம் நடக்கப்போவதை ராதாவின் உதவியாளர்கள் உணர்கின்றனர்.




(தொடரும்........)



என்றும் புன்னகையுடன் 
வெ.அருண்பாரதி






1 கருத்து: