புதன், 17 ஆகஸ்ட், 2011

ஆடிக்கழிவு


      

"ஆடிக் கழிவுல துணி எடுத்தியளா? வில சவுரியமா கெடைக்கி. நாங்க எல்லாருக்கும் சேர்த்து நேத்துதான் துணி எடுத்துட்டு வந்தோம்" என்று பலர் பலரிடம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவும், வியாபாரத்தைப் பெருக்குவதற்காகவும் ஜவுளிக்கடைக்காரர்கள் கண்டுபிடித்த யுக்தி தான் இந்த ஆடிக்கழிவு விற்பனை. இந்த யுக்தி ஒரளவு வெற்றி பெறவே இதை ஜவுளிக் கடைக்காரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வணிகர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். தற்போது தங்க வியாபாரிகளும் இந்த யுக்தியை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.


         தங்கத்தை வைத்து தான் ஒரு பெண் புகுந்த வீட்டிற்குள் நுழையும் கலாச்சாரத்தை கண்டுபிடித்தவனை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். அவனை ஆசை தீர அடித்தே கொல்ல வேண்டும். முடியாமல் போகும் பட்சத்தில் திட்டியாவது தீர்க்க வேண்டும். சமீப காலங்களில் பவுன் கணக்கில் மணமகள் விலை பேசப்படுவதும், அளவு குறைந்தால் கொடுமைப்படுத்தப்படுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்றாகி விட்ட போதிலும் இன்றைய குடும்பங்களின் கெளரவப் பிரச்சனையாக இந்த வரதட்சணை இருக்கிறது. இருப்பவர்கள் கொடுப்பார்கள். பாவம் இல்லாதவர்கள்? அப்படி என்ன தான் இந்த தங்கத்தில் இருக்கிறது என்று எனக்கு இன்று வரை புரியவே இல்லை. இரும்பு, செம்பு போன்று தங்கமும் ஒரு உலோகம் தான் என்கிற அளவில் மட்டும்தான் தங்கத்தின் மீதான என் பார்வை இன்று வரையும், இனிமேலும் இருக்கிறது. இருக்கப்போகிறது. இன்று தங்கத்தின் விலைவாசியைப் பார்த்தாலே பயமாகத் தான் இருக்கிறது. சர்வசாதாரணமாக கிராம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவது அநியாயம் தான்.  அநேகம் என் மகன் அல்லது மகளின் கல்யாண வயதில் தங்கம் கிராமுக்கு பத்தாயிரத்தைத் தாண்டினாலும் ஆச்சரியம் இல்லை. 


        சரி நம்ம கதைக்கு வருவோம். ஆடிக்கழிவில் எப்படியாவது துணிமணி வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலைக்கு நம்மில் பலர் வந்து விட்டோம். இன்று துணிகளின் வகைகளும் பல்கிப் பெருகி விட்டன. குறிப்பாக பெண்களின் ஆடை வகைகளுக்கு வாயில் நுழையாத பெயரெல்லாம் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அனார்கலி, சல்வார் கமீஸ், பாட்டியாலா, செமி பாட்டியாலா, பஞ்சாப் கமீஸ், வஸ்த்ரகலா என்றெல்லாம் பல வகைகளில்.... பல பெயர்களில்... விலை தான் சாமானியன் வாங்குவதற்கு ஏற்ப இல்லை. 


           என் சிறு வயதில் தீபாவளி வந்துவிட்டாலே மனதில் ஒரு பட்டாம் பூச்சி பறக்கும். புதுத்துணி, பட்டாசு கனவுகளில் கலர் கலராய் நிறையும். என் தந்தை கடைசி வரை புதுத்துணியோ, பட்டாசோ எளிதில் வாங்கியே தர மாட்டார். வேலை விசயமாக அவர் வெளியூர் சென்று வீடு திரும்பவே தீபாவளியன்று அதிகாலை 4 மணி வரை ஆகி விடும். அப்பா வரும் வரை நாங்கள் தூங்காமலே காத்திருப்போம். எங்கள் வீட்டில் ஆடிக்கழிவில் துணி வாங்கியதாக வரலாறே கிடையாது. தீபாவளி அன்று காலையில் என் பக்கத்து வீட்டு ரமேஷ் புதுத்துணி உடுத்தி பாட்டாசுக் கையோடு எங்களைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பான். நான் ஓரளவு வளர்ந்து விட்டபடியால் அழுகையை அடக்கிக் கொள்வேன். என் தம்பியும் தங்கையும் அழுதே விடுவார்கள். ஒரு வழியாக அப்பா வந்தவுடன் தான் அவர்களின் அழுகை சமாதானம் ஆகியிருக்கும். 


           அப்பா வீடு திரும்பியதும் அவசர அவசரமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு மார்க்கெடில் ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று எங்களுக்குத் தேவையானதை வாங்கிக்குடுப்பார். எப்படியாயினும் விலை 500க்குள் முடிந்து விடும். கடைக்காரன் "என்ன அண்ணாச்சி, புதுத்துணி இப்ப தான் வாங்க வந்தியளா? கொஞ்சம் சீக்கிரமா வந்து வாங்கியிருந்தா நெறய மாடல் பாத்துருக்கலாமே" என்று பேரம் பேச என் தந்தைக்கு நேரம் கிடைத்தை எண்ணிக் கொள்வார். முடிவில் "என்ன அண்ணாச்சி உங்களுக்கும் வீட்டம்மாக்கும் வாங்கலயா?" என்றதும் வழக்கம் போல சொல்கிற "ஏற்கனவே வாங்கியாச்சி" என்று பதில் வரும். விபரம் புரியாத என் தங்கை "அம்மாக்கும் உனக்கும் மட்டும் சீக்கிரம் வாங்கிக்கிறீங்க. எங்களுக்கு மட்டும் ஏன் லேட்டா வாங்குறீங்க" என்று கேட்பாள். பதிலேதும் பேசாமல் தந்தை எங்களை கிளப்புவார். மிளகுவத்தல் வெடி (பிஜிலி) வெடி 2 பாக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பும் போது தவறாமல் தம்பி பொட்டு வெடியும், துப்பாக்கியும் கேட்டு அழுவான். அவனை எப்படியாவது சமாளித்து வீடு வருவதற்குள் அப்பாவுக்கு போதும் போதும் என்று ஆகி விடும்.   


      வீட்டிற்குள் வந்ததும் புதிய துணி உடுத்தும் ஆசையிலும், வெடி போடும் அவசரத்திலும் அரைகுறையாக குளித்து விட்டு உடையணிந்து வெளியே ஓடுவோம். என் அம்மாவும், அப்பாவும் போட்டிருக்கும் துணி அநேகம் அவர்கள் ஒரு வாரமோ அதற்கு முன்போ ஏற்கனவே அவர்கள் உடுத்தியிருந்ததாக இருக்கும். 


     இப்படியான என் சிறு வயது தீபாவளிகள் அழகானவை, அர்த்தங்கள் நிறைந்தவை. அந்த காலத்தில் தீபாவளித் தருணங்களை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தொலைத்ததாய் நினைவில்லை. என் சக நண்பர்களோடு பால்ய வயது தோழிகளோடு தான் கொண்டாடினோம். 


         
     இன்று கொண்டாட வேண்டிய பல விழாக்களை தொலைக்காட்சிப் பெட்டியின் சிறப்பு நிகழ்ச்சிகளும், புதிய திரைப்படங்களும் தின்று விட்டு ஏப்பம் விடுகின்றன. கடந்த தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் முன்பு தான் என் நண்பன் மனோவின் அக்காவுக்கு திருமணமாகி இருந்ததால் மனோவின் அக்காவும், அத்தானும் தலை தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வந்திருந்தார்கள். தீபாவளிக்கு 2 நாள் முன்பு நான், மனோ, அருண் காசி மனோவின் அத்தானுக்கு துணி எடுக்க திருநெல்வேலியின் பிரம்மாண்ட ஜவுளிக்கடைகளை தேடிச் சென்று அலைந்து கொண்டிருந்தோம். அதில் வண்ணார்ப்பேட்டை கடையில் அதிக நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் பார்த்த வெரைட்டிகளின் விலை அதிகமாக இருந்ததால் எனக்குப் பார்க்க இஷ்டம் இல்லாமல் துணி வாங்க வந்திருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அதில் ஒரு குடும்பம் வகை வகையாக ஆடைகள் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக நாங்கள் துணி எடுத்து விட்டு கிளம்பவும் அந்த குடும்பம் கிளம்பவும் நேரம் சரியாக இருந்தது. அந்த குடும்பத்தினர் மட்டும் பத்தாயிரம் ரூபாய் வரை துணி எடுத்திருப்பதாக கேஷ் செக்சனில் இருப்பவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 


         மனோவும், காசியும் பைக் எடுக்க சென்றார்கள். நான் வெளியே காத்திருத்தேன். அந்த பத்தாயிரம் துணி வாங்கி குடும்பத்தின் ஒரு பெண் வெளியே பூ விற்கிற ஒரு சிறுமியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார், "என்னம்மா நீ மல்லிப்பூ யான வெல சொல்லுத. ஒரு முழம் பதினஞ்சு ரூபாயா? முழம் எட்டு ரூபாய்க்கு தர்றதா இருந்தா தா, இல்லன்னா பூ வேணாம்". அந்த சிறுமியின் உடை பலமுறை கிழிந்து பலமுறை தைக்கப்பட்டதாய் இருந்தது.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக