வியாழன், 23 ஜூன், 2011

காலத்தால் அழியாத சினிமாக்கள் (பாகம் - 1)



         ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு திரைப்படத்தை நேற்று கே டிவியில் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டேன். காதலிக்க நேரமில்லை தான் அந்தப் படம். பொதுவாக இந்த மாதிரியான முழுநீள நகைச்சுவைப்படங்களை எத்தனை தடவையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தை பார்த்ததிலிருந்து  பழைய சினிமாக்களைப் பற்றியும் சினிமா விசித்திரங்களைப் பற்றியும் நான் படித்தறிந்த, பார்த்து அதிசயித்துப் போன செய்திகள் என் மனதில் வந்த வண்ணம் இருந்தது. அந்த சிந்தனை ஓட்டத்தை அப்படியே பதிவு செய்யலாம் என்றும் தோன்றியது. இப்போது இதையே ஏன் தொடர்கட்டுரையாக எழுதக்கூடாது என்று கேள்வி என்னுள் எழுப்பிக் கொண்டு சினிமா பற்றிய என்னிடம் இருக்கும் பல புத்தகங்களுடனும், என்னுடைய அனுபவங்களின் துணையுடனும் இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கிவிட்டேன். 

பொதுவாக சினிமா மக்களோடு கலந்து விட்ட ஒன்று. சினிமாவையும் மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தக் காலத்திலிருந்து மக்கள் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்கவில்லை. மாறாக சினிமாவை, அதில் நடித்த நடிகர்களை தன் ரேசன் கார்டில் சேர்க்காத குறையாகத் தான் மக்கள் சினிமாவை நேசித்து வருகிறார்கள். அந்த காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் பிற நடித்த திரைப்படங்கள் புதிதாக வரும் சமயங்களில் ஒரு ஊரே ஒட்டு மொத்தமாக திரையரங்குக்கு வந்து குடியமர்ந்தது போல இருக்கும். சினிமாவை மக்கள் கொண்டாடுகிறார்கள். அதைப் போலவே சினிமா நடிகர்களும் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு மக்களை மகிழ்வித்து இருக்கிறார்கள். அன்றைய சினிமாவின் தந்தையாக நாடகத்துறை விளங்கி இருக்கிறது. ஆனால் தற்போது நாடகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டதென்றே கூறலாம். எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற சில சினிமா பிரபலங்களும், முற்போக்கு சங்கத்தின் கலைஞர்களும் நாடகத்தை காப்பாற்றி வருகிறார்கள். அந்தக் காலத்தில் போடப்பட்ட புராண நாடகங்களான சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன், வள்ளித் திருமணம் போன்ற நாடகங்களை இன்றைய தலைமுறையினர் மறந்துவிட்டனர். அதில் நடித்தவர்கள் வேறு தொழில் தெரியாமல் வரலாற்றிலிருந்து காணாமல் போனது ஒரு சோக வரலாறு.



           அது கிடக்கட்டும். முதலில் எம்.கே.தியாகராச பாகவதர் கதையிலிருந்து வருவோம். எம்.கே.தி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற இவர் தமிழ்சினிமாவின் பொக்கிஷம் என்றே கூறலாம். அவரின் பாடல்களும், அதில் வெளிப்படும் அவரின் பாவனையும் குரலும் எளிதில் நம்மை வசியப்படுத்திவிடும். அந்த காலத்தில் சினிமா நடிகர்கள் தன் சொந்தக்குரலிலே தான் பேசியிருக்கிறார்கள் பாடி இருக்கிறார்கள்.

                  அந்தக் காலத்தில் தியாகராச பாகவதர் மேல் மக்கள் பைத்தியமாகவே இருந்தார்கள் எனலாம். அவரின் வீடு திருச்சியில் இடைத் தெருவில் இருக்கிறது. அவர் வெளியூர் பயணங்களை முடித்து விட்டு வீடு திரும்பும் போது அவர் போகிற வழியெங்கும் மக்கள் திரளாக கூடி இருக்கிறார்கள். அவரை ஒரு முறை தொட்டுவிட்டால் போதும் தான் பிறவிப் பயன் அடைந்து விடுவோம் என்று கருதி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரின் அழகும், புகழும் மக்களை வசியப்படுத்தி வைத்திருந்திருக்கிறது.

            ஒருமுறை எம்.கே.தியாகராச பாகவதரின் "டம்பாச்சாரி" என்ற நாடகத்தை கும்பகோணத்தில் போட்டிருக்கிறார்கள். அந்த நாடகத்திற்கு முதன் முதலாக இலங்கையிலிருந்து ஒரு நடிகை வந்து நடித்திருக்கிறார்கள். அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கும், நடிகையைப் பார்ப்பதற்கும் பெருங்கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தை சமாளிக்கத் திணறிய அரசாங்கம் என்ன செய்தது தெரியுமா?

                                                   

அடுத்த பதிவில் தொடர்கிறேன். 
(தயவு செய்து தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்)

                                                      என்றும் புன்னகையுடன்
                                                                  அருண் பாரதி

1 கருத்து: