வெள்ளி, 24 ஜூன், 2011

காலத்தால் அழியாத சினிமாக்கள் (பாகம் 2)


               தியாகராச பாகவதர் நடித்த "டம்பாச்சாரி" இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. கும்பகோணம் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நாடகத்தைப் பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க அரசாங்கம் திணறியது. அவர்களுக்காக தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு சிறப்பு ரயிலையே அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.

           பொதுவாக அந்த காலத்து நாடகங்கள் சினிமாக்களைப் ஏதோ இரண்டு மூன்று மணி நேரங்களில் முடியக்கூடிதல்ல. வள்ளித்திருமண நாடகம் மாலை தான் தொடங்கும். நாடகத்தின் துவக்கத்தில் பபூனாக வரும் கலைஞர் "வாங்க வாங்க உக்காருங்க, வந்த காலில் நிக்காதிங்க" போன்ற பல பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் ஜோராக மக்கள் ரசித்து நாடகத்தை விசில் சத்தம் சகிதமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாடகத்தின் நாயகன் முருகன் வான வேடிக்கைகள், தாரை தப்பட்டைகள் முழங்க அதிகாலை 4 மணிக்கு மேல் தான் மேடைக்கே வருவார். வரும் போதே "காயாத கானகத்தே நின்றுலா உனர்காரிகையே மேயாத மான்" என்று மானைத் தேடி வருவார். தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் சுவிட்ச் போட்டார் போல ஒரே நேரத்தில் எழுந்து ஆர்ப்பரிப்பார்கள். விடிய விடிய அந்த நாடகம் நடைபெறும். மக்களும் அதற்கேற்றவாறு உணவு, தலையணை போன்ற சகல பொருட்களையும் கொண்டு வந்து விடுவார்கள். நாடகம் நடைபெறும் மைதானத்திலேயே சமைத்து சாப்பிட்ட ஒரு இனிமையான அனுபவங்களும் அன்றைய கால மக்களிடம் இருந்தது. நிஜமாகவே அந்த காலத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். 

           நானும் சிறுவயதில் சில நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு நினைவுள்ள வரை அவை அனைத்தும் சமூக நாடகங்கள் தான். எங்கள் ஊரில் மாணவர் சங்கம் என்னும் அமைப்பு பொங்கலுக்கு அடுத்த நாள் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் அதில் நான் பார்த்த குமுதம், பொஞ்ச் (பஞ்சாயத்து) போன்ற நாடகங்கள் என்னால் இன்றும் மறக்க முடியாதவை. அதில் பஞ்சாயத்து நாடகம் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஊரில் தேவையில்லாமல் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டு ஒற்றுமையைக் கெடுக்கும் ஊர்ப் பெருசுகளைக் கிண்டல் செய்யும் நாடகம் அது. பெருசுகளின் பலத்த எதிர்ப்புடன் என்று விளம்பரம் செய்யாத குறையாக நாடகம் தொடங்கும். நண்பர் துளசி ராமன் தலைமையிலான நாடகக்குழு இப்படிப்பட்ட நாடகங்களைப் போட்டிருக்கிறார்கள். 

             அந்த மேடையில் கடைசியாக அவர்கள் போட்ட நாடகம் "மார்டன் சுயம்வரம்". இது போன்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் என்று எங்கள் ஊர் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற அண்ணன் ரவிக்குமாரும் அந்த நாடகங்களில் நடிப்பதை மிகச் சிறு வயதில் ஆர்வத்துடனும் பொறாமையுடனும் பார்த்திருக்கிறேன். தன் பல குரல் திறமையால் பார்ப்பவரை கட்டிப் போட்டு விடுவார். மேலும் என் பெரியப்பா ஜி.டி.ரகுநாதன் அவர்களும் அந்த காலத்திய நாடக நடிகராக இருந்திக்கிறார். இப்படியாக கடந்த 26 வருடங்களாக பாளையங்கோட்டையில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கதையாக சொல்லி வைத்தாற் போல 90 சதம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூருக்கு சென்று விட்டதாலும், மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று உள்ளூரை மறந்துவிட்டதாலும், மக்களும் தங்கள் அன்றாட பிழைப்புக்குள்ளும், தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளும் மூழ்கிப் போனதாலும் எங்கள் ஊரும், அந்த பொங்கல் விழாவும் வெறிச்சோடி விட்டது.

         சரி நம்ம தியாகராச பாகவதர் கதைக்கு வருவோம். இப்படியாக அவர் நடித்த பல நாடகங்கள் சக்கை போடு போட்டிருக்கின்றன. அவர் நடித்த முதல் நாடகமே ஏறக்குறைய அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது. அவர் நடித்த முதல் நாடகம் அரிச்சந்திர நாடகம். அதில் லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்று திறம்படச் செய்தார் நம் எம்.கே.தியாகராச பாகவதர். மதுரையைச் சேர்ந்த வயலின் கலைஞர் மதுரைப் பொன்னு ஐயங்கார் தானே முன் வந்து தியாகராச பாகவதருக்கு கருநாடக சங்கீதத்தை எந்த வித கட்டணமும் பெறாமல் சொல்லித்தந்தார். இசையை கற்கும் நேரம் தவிர நடராச பாகவதரிடம் நாடகம் கற்றுக் கொண்டார். நடராஜர் வேறு யாருமல்ல இசையரசர் கிட்டப்பாவினால் இசையமைக்கப்பட்டு மிகப் புகழ் பெற்ற காயாத கானகத்தே பாடலின் ஆசிரியர் இவர் தான். தியாகராச பாகவதரும் மிகச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்து விட்டார். பாகவதரின் நாடகங்கள் புகழ் பெறக் காரணம் பாகவதரிடம் இருந்த இசைஞானம் தான். அந்த காலத்தில் இசை வித்வான்கள் பயன்படுத்தாத பல ராகங்களை அவர் நமக்கு தந்திருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய ராகங்கள் என்னென்ன? எம்.கே.தியாகராசருக்கு பாகவதர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள்? 

அடுத்த பதிவில் தொடருவோம்.

என்றும் புன்னகையுடன் 
வெ.அருண்பாரதி  

(தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக