இன்று வரையும் என்னால் ஒரு பாட்டைக் கேட்காமல் தூங்கமுடியாது. முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா, என் பாட்டை விரும்புமா என்ற பாடல் தான். இந்தப் பாட்டுக்கு அடிமையாக என்னைப் போன்று பலரும் உள்ளனர். இந்தப் பாட்டை யார் பாடியது என்று தெரியாத வயதிலிருந்தே இந்தப் பாட்டை ரசித்து வருகிறேன். என்னே அருமையான குரல், பாடல் வரிகளோடு நம்மை மிதக்க வைக்கின்ற குரல். பாடலின் சூழலுக்கேற்ப குரலிலும் ஒரு சோகம் கலந்திருக்கும். அந்த வசீகரக்குரலின் சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் என்று பிற்பாடு தான் எனக்குத் தெரிய வந்தது. ஒரு கைதியின் டைரி யில் தொடங்கி ஊர்க்காவலன், முதல்வசந்தம் போன்ற படங்களில் அவர் செய்த வில்லத்தனத்தை தமிழ் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
உண்மையில் அவர் நடிகராகவே தமிழில் அறிமுகமானார். மலேசியத் தமிழர்கள் எடுத்த இரத்தப்பேய் என்ற படம் அவரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது. ஆனால் தன்னை ஒரு பாடகனாகவே அவரின் மனகோட்டோவியங்களில் வரைந்து வைத்திருந்தார் போலும். ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படத்தில் தொடங்கிய அவரது இசைப்பயணம் 16 வயதினிலே படத்தின் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலின் மூலம் உச்சத்துக் சென்றது. பட்டி தொட்டி எங்கும் அவரின் பாடல், அவரின் குரல்.
இப்படிப் புகழேடு விளங்கிய அவரின் வாழ்விலும் சறுக்கல்கள். 1990 களில் நீ சிரித்தால் தீபாவளி படமெடுத்து தன்னை கையைச் சுட்டுக் கொண்டார். அவரால் புகழடைந்தவர்கள், மேலே வந்தவர்கள் அவரை மறந்து போயினர்.
உடற்கோளாறு காரணமாக பாடவே முடியாத நிலைக்கு வந்தார் வாசுதேவன். மருத்துவ செலவுகளுக்குக் கூட உதவியின்றி தவித்தார். திரையுலகம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கடைசியாக தன் இறுதி நாட்களை எப்படியோ கழித்து 2011 பிப்ரவரி 20ல் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். நாளை அவருக்குப் பிறந்த நாள். வாழ்த்து சொல்ல நாம் இருக்கிறோம். ஆனால் வாழ வேண்டிய அவர் எங்கே?

மலேசியா வாசுதேவனைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். இவை நான் இதற்கு முன் அறியாதவை. நன்றி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு