எம்.கே.தியாகராச பாகவதர் ஆரம்பத்தில் திருச்சித் தியாகராசன் என்றே அழைக்கப்பட்டார். ஒரு முறை தியாகராசர் பாடிய கச்சேரி நடைபெற்றது. அதில் அவரது குருவான மதுரை பொன்னு தேசிகர் வயலின் வாசிக்க, தட்சிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிராவும் இசைக்க கச்சேரி வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தியாகராசரின் குரல்வளத்தால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து கொண்டிருந்தார். கச்சேரியின் முடிவில் தட்சிணாமூர்த்திப் பிள்ளை தியாகராசரின் திறமையை வியந்து எண்ணி அவருக்குப் "பாகவதர்" என்ற பட்டத்தை வைத்து விட்டார்.
பொதுவாக பட்டைப்பெயர் வந்த விதத்தைக் கேட்டால் மிக அருமையாக இருக்கும். ரோட்டில் நின்று எருமை மாடு என்று கத்திப் பாருங்கள். எருமை மாடுகள் திரும்பிப் பார்க்கிறதோ இல்லையோ குறைந்த பட்சம் ஐந்து பேராவது திரும்பிக் பார்ப்பார்கள். எனக்குக் கூட ஒரு பட்டைப் பெயர் உண்டு. 11ம் வகுப்பு படிக்கும் போது தான் அந்தப் பெயர் வந்தது. சூப்பர் ஸ்டார் கூட ஒரு படத்தில் சொல்லுவார். இது நா வச்சிக்கிட்ட பேரு இல்ல. மக்கள் எனக்கு வச்ச பேருன்னு (சூப்பர் ஸ்டார உதாரணத்துக்கு சொல்றதுனால கதை சூப்பரா இருக்கும்னு நெனைக்காதிங்க) நா மொக்க வாங்குன கதை தான். என் நண்பனின் வீடு மரங்களும், கிளிகளும், புறாக்களும் என எப்பவும் நிறைந்து இருக்கும். எனக்கு ஒரு தடவையாவது கிளி புடிக்க வேண்டும் என்று ஆசை. நண்பனிடம் சொல்லி கண்ணியை ஏற்பாடு செய்தேன். கண்ணி விரித்து கிளிக்காக காத்திருந்தேன். நினைத்தது போல் கண்ணியில் இருக்கும் பழத்திற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டது. ஆனால் கிளி அல்ல. காக்கா. இதை தெரியாமல் வகுப்பில் சொல்ல, எனது கணக்கு வாத்தியார் எனக்கு கிளி என்றே பட்டைப் பெயர் வைத்து விட்டார். நான் பள்ளி முடித்து 6 வருடங்களுக்கு மேல் ஆகியும் இப்ப கூட அந்த கதையைச் சொல்லி மாணவர்களிடம் என் "புகழ்" பரப்பி வருகிறாராம்.
ராதாகிருஷ்ணன் என்ற ஒரு பழம் பெரும் நடிகர் ஒருவர் உண்டு. அவரும் திருச்சியைச் சேர்ந்தவர் தான். அவர் பெயரை மட்டும் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. "காக்கா" ராதா கிருஔ்ணன் எனும் அவரின் பட்டைப் பெயருடன் சொன்னால் தான் தெரியும். வசூல் ராஜா படத்தில் கிரேசி மோகன் அவர்களின் தந்தையாக கேரம் விளையாடும் தாத்தாவாக நடித்திருப்பார். அவருக்கு இந்த காக்கா அடைமொழி எப்படி ஒட்டிக் கொண்டது என்பது சுவையான விசயம். அவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் குழுவில் தான் ரொம்ப காலமாக இருந்தார். மங்கையர்கரசி படத்தில் அரண்மனையில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் "காக்கா பிடிச்சா தான் வேலை கிடைக்கும்" என்று என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை மறைந்திருந்து கேட்ட ராதாகிருஷ்ணன், ஐந்தாறு நிசக் காக்காய்களை பிடித்து வந்து "அம்மா நா காக்கா புடிச்சிட்டேன், எனக்கு அரண்மணையில வேல கெடச்சிடும்" என்று சொல்லுவார். அதிலிருந்து தான் அவருக்கு காக்கா ராதாகிருஷ்ணன் என்று பெயர் வந்தது.
பக்கோடா கல்யாணராமன் "மெட்ராஸ் டு பாண்டிச்சேரி" படத்தில் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் அவரின் பெயரில் பக்கோடா அடைமொழியாக சேர்ந்து கொண்டது.
ஜெமினியின் கதை இலாக்காவில் பங்கேற்று "மிஸ் மாலினி" படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த சீதாராமன் எனும் என்னும் நடிகர் தான், "ஏழை படும் பாடு" படத்துக்கு கதை, வசனம் எழுதி, அதில் "ஜாவர்" என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை ஏற்று நடித்ததால் ஜாவர் சீதாராமனாக பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டார் (திரை வளர்த்த தமிழ்)
இப்படி பட்டைபெயர்களையும்,பெயர்க்காரணங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி நம்ம கதைக்கு வருவோம். தியாகராசர் பாகவதர் ஆனதும் அவரது புகழ் மேலும் பரவத் தொடங்கியது. ஆரம்ப நாட்களில் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியவர். பிற்பாடு நாடகத்தின் கதாநாயகனாகவே மாறிவிட்டார். 1926ல் "பவளக்கொடி" என்ற நாடகம் தான் பாகவதர் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம். அதற்கு பிற்பாடு அவரது இசையும், நாடகமும் தமிழகம் மட்டும் அல்லாது பர்மா, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளையும் பரவி மக்கள் மனதை கொள்ளை கொண்டது.
குறிப்பாக அவரது இசைப்புலமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நவீன சாரங்கதாரா படத்தில் சாருகேசி ராகத்தில் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல் தான் இசைத்தட்டில் வெளிவந்த முதல் பாடல். மேலும் சாருகேசி ராகத்தை கர்நாடக பிரியர்களுக்கு விருந்தாய் அளித்த பெருமை பாகவதரையே சாரும். மேலும் அவரின் மறக்கமுடியாத "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்ற பாடல் கூட இதே ராகத்தில் பாடப்பட்ட பாடல் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பிறகு டி.எம்.செளந்தர்ராஜன் "வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்" என்ற பாடல் இதே ராகத்தில் வந்தது.
இசையிலும், நாடகத்திலும் புகழ் பெற்ற நம் பாகவதர் பிற்பாடு சினிமாவில் கொடிகட்டிப் பறந்ததையும், அவரின் புகழைக் குலைக்க நடந்த ஒரு நிகழ்ச்சியையும் அவசியம் நான் பதிந்தே ஆக வேண்டும்.
(ஆனால் அடுத்த பதிவில்.........)
(தங்களின் மேலான கருத்துக்களையும் சுவையான தகவல்களையும் எதிர்பார்க்கிறேன்).
என்றும் புன்னகையுடன்
வெ.அருண்பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக